Sunday 17 October 2021

*🛡️ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் / இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை / பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும் ! / அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் ! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*

*🛡️ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் / இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை / பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும் ! / அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் ! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 18/2021  நாள்: 17.10.2021*

*_ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும்!_*

*_அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்!_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*
                  
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*                          
*🛡️கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாகத் தமிழகத்தில் நேரடி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின்றி முடங்கிக்கிடந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் 01.11.2021 முதல் நேரடி வகுப்புக்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.*

*⚔️*                          
*🛡️பள்ளிகள் திறப்பைத் தொடர்ந்து, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கு வாங்க வேண்டிய கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தனது செயல்முறை ஆணையில் பள்ளிக்கல்வி ஆணையர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.*

*⚔️*
*🛡️ஆனால், பள்ளிக்கல்வி ஆணையரின் ஆணையில் குறிப்பிட்டவாறு பள்ளிகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்குரிய நிதி வசதி பள்ளிகளில் இல்லை. மேலும், இக்கல்வியாண்டில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கிட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.*

*⚔️*
*🛡️மேலும், தற்போது பூஜ்யக் கலந்தாய்வு தொடர்பான செய்திகள் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் "ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்படாது என்று அமைச்சர் திட்ட வட்டமாக குறிப்பிடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர்களுக்கு பூஜ்யக்  கலந்தாய்வு என்பது முற்றிலும் தேவையற்றது என்பது எங்களது அமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.*

*⚔️*
*🛡️மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 விதமான வரையறைகள் வைத்துள்ளோம். பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கும் போது அது குறித்துத் தெரிவிப்போம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பதட்ட நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. எனவே, குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி. ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றும் போது தான் பள்ளிச் சூழல், பள்ளியின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத்துடன் அப்பகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்படும்.*

*⚔️*                        
*🛡️அதுமட்டுமல்ல 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்த பணி ஓய்வை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். அவர்களை இடமாற்றம் செய்வது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைந்துவிடும். எனவே, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய மேற்கண்டவாறான இடமாறுதல் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை முற்றிலுமாகக் கைவிட்டு விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில் நேர்மையான வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️19 மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து கற்றலில் ஈடுபடவுள்ள சூழலில், மாணவர்களை கல்விச் சூழலுக்கு, பள்ளிச் சூழலுக்கு கொண்டு வருவதற்குரிய மிக மிக முக்கியமான பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அப்பணியில் கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் முழுமூச்சோடு ஈடுபட உள்ள ஆசிரியர்களிடம் குழப்ப நிலையை ஏற்படுத்தக்கூடிய பதட்ட நிலையை உருவாக்கக் கூடிய இதுபோன்ற அறிவிப்புக்களை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️ஜீரோ கவுன்சிலிங், 10, 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தினால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலந் தழுவிய போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதையும் மாநில அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.*

🤝இப்படிக்கு,
*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday 11 October 2021

*TNPTF - 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம், மேலும் 31.10.2021 க்குள் உறுப்பினர் சேர்க்கையினை முடிப்போம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF - 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம், மேலும் 31.10.2021 க்குள் உறுப்பினர் சேர்க்கையினை முடிப்போம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*_பொதுச்செயலாளரின் கடிதம்-நாள்:11.10.2021_*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றுக் கொரோனாவால் கடந்த 19 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 01.09.2021 முதல், 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 01.11.2021 முதல், 1 முதல் 8 முடிய உள்ள வகுப்புக்களும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*

*⚔️*
*🛡️தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என்று கடந்த 01.08.20021 மற்றும் 19.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். ஏனெனில் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கே மிக அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சென்னை உயர்நீதிமன்றமும் கூட மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று திட்டவட்டமாக ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளன. 01.11.2021 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு என்பது கூட தாமதமான அறிவிப்பாகவே நாம் கருதுகிறோம்.*

*⚔️*
*🛡️பள்ளிகள் திறக்கப்படுவதில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சி. நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளிகளைத் தமிழக அரசு மூடியது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வரவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 17.08.2020 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்களுக்கு வருகை புரிந்தார்கள். கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலங்களில், பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த ஆண்டும் ஆகஸ்ட் 2021 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தந்தார்கள்.*

*⚔️*
*🛡️மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வரவில்லையென்றாலும் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்றி வருகிறார்கள். இணைய வழியாகவும், கட்செவி, முகநூல், கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாகவும் கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.*

*⚔️*
*🛡️நாள்தோறும் பள்ளிக்கல்வித்துறையிலிருந்து பல்வேறு அறிவிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக மாறி நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களையெல்லாம் செய்யச் சொல்லி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவதையும் பார்க்கிறோம். முதன்மைக் கல்வி அலுவலர்கள் வரம்பு மீறி சில இடங்களில் நடந்து வருவதையும், ஆசிரியர்களை அடிமைகளாக நினைக்கும் போக்கையும் சமீபகாலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. மாநில கல்வித்துறையின் உத்தரவுகளையும் தாண்டி தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு செயல்படும் சில மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆண்டான்-அடிமை என்ற மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.*

*⚔️*
*🛡️மாணவர்கள் பள்ளிக்கு வராத இந்த காலகட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களிடம் நாள்தோறும் கேட்கும் புள்ளிவிவரங்கள் மலைக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் கிராமப்புற ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறை காட்டும் கற்றல் வாய்ப்புக்கள் என்பதும் அவர்களுக்கு போதுமான பயனைத் தருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அத்தகைய கற்றல் வாய்ப்புக்களைப் பெறுவதற்கான அடிப்படை வசதிகள் அவர்களிடம் இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலில் கல்வித்துறைக்கு நாள்தோறும் புள்ளி விவரங்களை அளிப்பது, தங்களிடம் பயிலும் வாய்ப்பு வசதிகளற்ற குழந்தைகளுக்கு இன்றைய சூழலில் கற்றல் சூழலை உருவாக்குவதில் ஏற்படும் இடர்பாடுகள் என இரட்டைச் சுமையுடன் ஆசிரியர்கள் இன்றைய நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*

*⚔️*
*🛡️இத்தகு சூழல் மாறிட "பள்ளிகள் திறக்கப்படுவது மேல்" என்ற எண்ணம் அனைத்து ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சிரமங்களை ஆசிரியர்கள் சந்தித்து வரும் சூழலில் "ஆசிரியர்கள் கடந்த 1½ ஆண்டுகளாக பணிக்கே செல்லாமல் ஊதியம் பெற்று வருகிறார்கள் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க அரசின் உயர் பொறுப்புக்களில் உள்ள சிலர் முயல்வதையும் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பொதுக்கருத்தை சமூகத்தில் உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று சொல்வதைப் போல ஆசிரியர்களை ஏளனமாக எடை போடுபவர்களை ஆசிரியர் சமூகம் உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.*

*⚔️*
*🛡️இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 19 மாதங்கள் மூடப்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் 01.11.2021 முதல் திறக்கப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுச் சூழலால் இழந்த கல்வியை மீட்டெடுக்க சமூக அக்கறையோடு பணியாற்றுவோம். நீண்ட இடைவெளிக்குப் பின்பு பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பள்ளிச் சூழலுக்கு, கல்விச் சூழலுக்கு கொண்டுவருவது நமது முதற்கட்டப் பணி. அந்தப் பணியை நமக்கிருக்கும் கள அனுபவத்தைக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவோம்.*

*⚔️*
*🛡️நோய்த் தொற்றுச் சூழலிலிருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகளை மாணவச் செல்வங்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைப்போம். தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும், சமூகத்தையும் நோய்த் தொற்று தாக்காமல் தவிர்க்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை மாணவச் செல்வங்களுக்குப் புகட்டுவோம். நோய்த் தொற்றால் எதிர்காலத்தில் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க கடமை உணர்வுடன் பணியாற்றுவோம்.*

*⚔️*
*🛡️கல்விப் பணியைக் கடமை தவறாது ஆற்ற வேண்டிய நம் பேரியக்கத் தோழர்கள் இயக்கப் பணியையும் இடையறாது ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இயக்கத்தின் அடிப்படைப் பணியான 2021-2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கைப் பணியை முடிப்பதில் அனைத்து வட்டார, நகர, மாநகர கிளைகளின் பொறுப்பாளர்களும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டிய தருணமிது. பள்ளி, பள்ளியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கைப் பணியை மேற்கொள்ள 31.10.2021 வரை சிறந்த காலமாகும். 01.11.2021 முதல் மாணவர்களின் கல்வியில் அதீத கவனம் செலுத்த வேண்டிய காலமென்பதால் 31.10.2021க்குள் உறுப்பினர் சேர்க்கைப் பணியினை நிறைவு செய்திட அனைத்துக் கிளைகளும் தவறாது கடமையாற்றிட வேண்டும்.*

*⚔️*
*🛡️கடந்த 19.09.2021 மதுரை மாநிலச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இயக்கத்தின் போர்வாளாம் "ஆசிரியர் கேடயம்" இதழுக்கு இயக்கப் புரவலர்களைச் சேர்ப்பது என்பதாகும். இயக்க இதழ் புரவலர் நிதியளிக்கும் இயக்கத் தோழர்களுக்கு "இயக்க இதழ் புரவலர் விருது" வழங்கிச் சிறப்பித்திட மாநில அமைப்பு முடிவெடுத்துள்ளது. இயக்க இதழை பேணிக் காத்திடும் இந்த உன்னதப் பணியில் பல மாவட்டக் கிளைகள் வீறு கொண்டு பணியாற்றி வருவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை மாநிலச் செயற்குழுவிலேயே மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என ஒரே நேரத்தில் 100 பேர் வரை புரவலர் திட்டத்தில் இணைந்தது என்பது உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது.*

*⚔️*
*🛡️"இயக்க இதழ் புரவலர் நிதி" பெறும் பணியில் மாநிலத்திலேயே மற்ற மாவட்டக் கிளைகளுக்கு முன்னுதாரணமாக பாய்ச்சல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது சிவகங்கை மாவட்டக் கிளை. இலக்கைத் தாண்டி இதுவரை நூறுக்கும் மேற்பட்ட இதழ் புரவலர்களை சிவகங்கை மாவட்டக் கிளை சேர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி வட்டாரக் கிளை மாநிலத்திலேயே மற்ற வட்டார, நகர, மாநகரக் கிளைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி 30 இதழ் புரவலர்களைச் சேர்த்திருப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.*

*⚔️*
*🛡️இயக்க இதழ் புரவலர் சேர்க்கையில் ஒவ்வொரு மாவட்டக்கிளையும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும் என மாநில அமைப்பு எதிர்பார்க்கிறது. நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சி இயக்கத்தின் மாபெரும் பிரச்சார ஆயுதமாம் "ஆசிரியர் கேடயம்" இதழ் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி பெறுவதற்கு பேருதவியாய் அமையும். இயக்க வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்குரிய அடித்தளமாக இது அமையும்.*

*⚔️*
*🛡️ஒவ்வொரு முறையும் மாநில செயற்குழு முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டக் கிளையும் தனது செயற்குழு அல்லது பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி மாநிலச் செயற்குழு முடிவுகளை நிறைவேற்றிட முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் மாவட்டச் செயற்குழு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டார, நகர, மாநகரக் கிளைகளின் செயற்குழு கூடி மாவட்டச் செயற்குழு முடிவுகளை நிறைவேற்றுவதில் கடமை தவறாது களப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு செயல்படும் போதுதான் மாநிலம் முழுவதும் இயக்கப் பணிகள் எழுச்சியுடன் இடையறாது நடைபெறும். நம் இலக்கை நோக்கிய இலட்சியப் பயணம் உறுதியுடன் முன்னேறும்.*

🤝தோழமையுடன்

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*