Monday 22 November 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு நிகழ்வு*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று (22.11.2021) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பேசினார்கள்.*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:22.11.2021*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*

*⚡மாநிலத் தலைவர் _தோழர் மூ. மணிமேகலை,_*

*⚡பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.J.மத்தேயு,_*

*துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.தோ.ஜாண் கிறிஸ்துராஜ்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர். கிருஷ்ணன்_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்.*

*ஆகியோர் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(22.11. 2021)சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரைச் சந்தித்துப் பேசினர்.*

*🤝தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday 21 November 2021

TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*

 *🚩TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்*
*நாள்:21.11.2021*

*🚩இன்று (21.11.2021), கோவையில் தான் பயின்ற சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  தோழர் மூ.மணிமேகலை, மாநிலச் செயலாளர் தோழர் த.சகிலா மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள், மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி,மாணவியின் பெற்றோரிடம்  சம்பவம் குறித்துக்  கேட்டறிந்து,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும், ஆறுதலையும் தெரிவித்தனர்*

*🚩மிகவும் வறிய நிலையில் உள்ள அம்மாணவியின் அப்பாவியான பெற்றோரின் நிலை கண்டு நமது இயக்கப் பொறுப்பாளர்கள் மிகவும் மனம் வருந்தினார். எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த அம்மாணவியின் அகாலமரணம் மிகப்பெரிய இழப்பாகும். தங்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களை தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல் கருதும் மிகப்பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மத்தியில்,இது போன்ற கயவர்கள் ஒரு சிலரின் கீழ்த்தரமான செயல்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.*

 *🚩தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

🤝தோழமையுடன்

 *ச.மயில்*
*பொதுச்செயலாளர்* 
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*




Wednesday 10 November 2021

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 20/2021  நாள்: 10.11.2021_*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை  பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*🛡️கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 3, 5, 8 வகுப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அடைவுத்தேர்வை (NAS) பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*🛡️பெருந்தொற்றுக் காரணமாக 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் சுழற்சிமுறையில் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.*

*🛡️மாணவர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டுதல், கற்றல் இடைவெளியைப் போக்குதல் ஆகிய பணிகளை மையப்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். வரலாறு காணாத அளவிற்கு நீண்ட காலம் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் இருந்த ஆரம்ப வகுப்புக்களின் மாணவச் செல்வங்களை பள்ளிச் சூழலுக்கு, கற்றல் சூழலுக்குக் கொண்டு வருவது என்பது கடினமான பணியாகும்.*

*🛡️மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் கூட தனது செய்தி வெளியீட்டில் "முதலிரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள்" என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறையும் அவ்வாறே உத்தரவிட்டுள்ளது.*

*🛡️இத்தகு சூழ்நிலையில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறந்து ஒரு வாரமே ஆகியுள்ள சூழலில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதத்தில் தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. 2019-20 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்து அந்த வகுப்பிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல், 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கே செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்காமல், 2021-22 ஆம் கல்வியாண்டில் 5 மாதங்கள் பள்ளிக்கு வர இயலாமல் தற்போது நேரடியாக மூன்றாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவனுக்கும், இதேபோன்று தற்போது 5, 8 வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் தேசிய அளவிலான அடைவுத் தேர்வு என்பது முற்றிலும் உளவியல் அணுகுமுறைக்கு மாறானதாகும்.*

*🛡️தேசிய அடைவுத் தேர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், அப்பள்ளிகளின் மாணவர்களும், மற்ற பள்ளிகளின்  மாணவர்களைப் போலவே பெருந்தொற்றுக் காலத்தில் கற்றல் வாய்ப்பை இழந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, 3, 5, 8 வகுப்புக்கான தேசிய அடைவுத் தேர்வை மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
   
🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்* 

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

                                                                     

Friday 5 November 2021

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி! - முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு /ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி /தமிழக அரசு வெளியிட்ட அரசாணை /ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி!/ முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்!/ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 19/2021  நாள்: 03.11.2021_*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️மாநில அரசு ஊழியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 01.11.2021ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 10.03.2020க்கு முன்பு வழங்கப்பட்டது போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1969ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. எரிகின்ற மெழுகுவர்த்தி தான் மற்றொரு மெழுகுவர்த்தியை சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்க முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவாசான் அண்ணா அவர்களால் ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதில் பேரார்வம் காட்டி வந்தனர். அவ்வாறு ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்வி அவர்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமைந்தது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகளாக வழங்கிவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் எவ்விதக் காரணமுமின்றி 10.03.2020 முதல் ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. இச்செயல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இச்செயல் அ.தி.மு.க ஆட்சியின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மிக முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்" என்று தெரிவித்தது. எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் அனைத்து நிலை ஆசிரியர்களும் இருந்தார்கள். அந்த நம்பிக்கையை வெடிவைத்துத் தகர்த்ததைப்போல உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்காமல் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அமைந்துவிட்டது.*

*⚔️*
*🛡️50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது ஒருவரது பணிக்காலம் முழுவதும் பணப்பலனைத் தரக்கூடியது. ஓய்வுக்காலப் பலன்களுக்கும் பொருந்தக்கூடியது. அப்படிப்பட்ட பயனைப் பறித்துவிட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை என்பது உயர்கல்வி பயின்றவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்திற்குக் கூட ஈடாகாது என்பது தான் உண்மை.*

*⚔️*
*🛡️மேலும், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை தனது ஊழியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான ஊக்கத் தொகை வழங்குவதில் மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, கல்விப்படி, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, மருத்துவப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தனது ஊழியர்களுக்கு வழங்காத தமிழக அரசு உயர் கல்வித்தகுதிக்கு மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்குவது என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.*

*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள உயர்கல்விக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசாணையை ரத்து செய்து விட்டு முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday 1 November 2021

*செங்கோட்டை வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா - செய்தி துளிகள்*

*(31.10.2021) அன்று.....பொதிகைத் தென்றலும் பொருணை நதியும் சங்கமிக்கும் தென்காசி மண்ணிலே....... இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள செங்கோட்டை வட்டாரத்திலே பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா.....* 

*தென்காசி மாவட்டக் கிளைக்கு மாநில மையத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்!*
 
*தொடரட்டும் இயக்கப் பணி!*
 
*மாவட்டம் முழுவதும் உயரட்டும் இயக்கப் பதாகை!*

*நேரடிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள உள்ள ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவச் செல்வங்களுக்கு TNPTF ன் வாழ்த்து செய்தி....*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
-----------------------------------------------
*வாழ்த்துச் செய்தி*
----------------------------------------------
*19 மாதங்களுக்குப் பிறகு* 

*ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில்*

 *இன்று(01.11.2021)முதல்*

*நேரடிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள்....*

*மழை காணாப் பயிர் போல*

 *மயங்கி நின்ற மாணவச் செல்வங்களுக்கு*

 *இன்று மகிழ்ச்சித் திருநாள்!*

*கன்றினைக் காணா பசுவைப் போல* 

*கலங்கி நின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு*

*இன்று உற்சாகத் திருநாள்!*

*எதிர்கால சமூகத்தைச் சமைக்கும்*

 *மாணவச் செல்வங்களுக்கும்....*

 *மாணவச் செல்வங்களை செதுக்கும் சிற்பிகளாம்*

 *ஆசிரியப் பெருமக்களுக்கும்....*

 *இழந்த கல்வியை ஈட்டிட.......*

*TNPTF மாநில மையத்தின்*

*இதயங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்!*

*வாழ்த்துக்களுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*