Wednesday 26 May 2021

*✍️கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் நிலையைத் தவிர்த்திட வேண்டுதல் சார்பாக தமிழக முதல்வருக்கு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.*

*✍️கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் நிலையைத் தவிர்த்திட வேண்டுதல் சார்பாக தமிழக முதல்வருக்கு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.*

*தஆஆகூ/மாஅ/கடித எண்: 33/2021, நாள்: 25.05.2021*

*_பெறுநர்_*

*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்*
*தலைமைச் செயலகம்*
*சென்னை - 9.*

*_மாண்புமிகு ஐயா,_*

_பொருள்: கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் நிலையைத் தவிர்த்திட வேண்டுதல் - விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுதல் சார்பாக._

*✍️கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கப் புதிதாகப் பொறுப்பேற்ற தங்கள் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இமைப்பொழுதும் சோராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தாங்களும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், உயர் அலுவலர்களும் தமிழகம் முழுவதும் இடையறாது பணியாற்றிக் கொண்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. அதேபோன்று இந்நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலநூறு பேர் இப்பணியின் காரணமாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இலட்சக்கணக்கான பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.*

*✍️அதேபோன்று கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் மட்டும் தமிழகம் முழுதும் பணியில் இருந்த ஆசிரியர்கள் சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆசிரியர்களின் குடும்பங்களிலும் பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பணியமர்த்தி ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இரண்டு மாவட்டங்களின் கல்வித்துறை அலுவலர்களும் ஆசிரியர்களுக்கு தனித்தனியே உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.*

*✍️அதன்படி 500 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்றைக் கண்டறியும் களப்பணியில் ஈடுபட்டு, அதன் விவரத்தை மேல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். இச்செய்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அப்பணி ஆசிரியர்கள் செய்யத் தகுந்த பணியாக இருக்க வேண்டும். மேலும், இது பெருந்தொற்றுநோய் சார்ந்த பணி என்பதால் தகுதி வாய்ந்த விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் இப்பணியில் ஈடுபடுத்துவது தான் சரியானதாக இருக்கும்.*

*✍️ஏனெனில், இது போன்ற மருத்துவம் சார்ந்த முன்களப் பணிகளில் முற்றிலும் அனுபவமில்லாத ஆசிரியர்களை எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் ஈடுபட உத்தரவிடுவது என்பது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகும். மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட இணை நோய்களுக்குத் தொடர் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கும் இப்பணிகள் வழங்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.*

*✍️மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 24.05.2021 செய்தியாளர்கள் சந்திப்பில், "கொரோனா நோய்த்தொற்றுப் பணிகளில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் கூட இப்பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (25.05.2021) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.*

*✍️எனவே, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் உத்தரவுகளை ரத்து செய்திடவும், விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் கொரோனா நோய் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் உத்தரவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.*

சென்னை
25.05.2021

_✍️தங்கள் உண்மையுள்ள,_

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

நகல்:

1. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 9

2. மதிப்புமிகு. தலைமைச் செயலாளர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 9.


Tuesday 25 May 2021

*கொரோனா, கரும்பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(NHIS)கீழ் கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*

*கொரோனா, கரும்பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(NHIS)கீழ் கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*

_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 07/2021 நாள்: 24.05.2021_

*✍️கொரோனா, கரும்பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*✍️கொரோனா, கரும்பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட அரசு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது._

*✍️கொரோனா பெருந்தொற்றால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை பெற அரசாணை எண்: 251 (மக்கள் நல்வாழ்வுத்துறை) நாள்: 22.05.2021 வெளியிட்டுள்ளது வரவேற்புக்குரியது.*

*✍️கடந்த ஆண்டு தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (NHIS) கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற அரசாணை எண்: 280 (நிதித்துறை) நாள்: 24.06.2020 ஐ வெளியிட்டது. அதில் கொரோனா நோய்க்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக் குறைந்த தொகையே அனுமதிக்கப்பட்டது.*

*✍️மேலும், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு வழங்கும் தொகையை விட மிகக் குறைவான தொகையே கடந்த ஆண்டு ஆசிரியர்கள், அரசு  ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு தொகை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.*

*✍️உதாரணமாக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சையில் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 35000 ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 8500 ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கொரோனா சிகிச்சையில் கட்டணமில்லா சிகிச்சையை வழங்கிட வேண்டும்.*

*✍️தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. எனவே, கரும்பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்து கட்டணமில்லா சிகிச்சைக்கு வழிவகை செய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.*

சென்னை
24.05.2021

✍️இப்படிக்கு,

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

_குறிப்பு:_
*தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.*


Saturday 22 May 2021

*📲TNPTF,MUTA இணைந்து நடத்தும் கோவிட்-19 தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம்*

*📲TNPTF,MUTA இணைந்து நடத்தும் கோவிட்-19 தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்*
*22.05.2021*

_அன்பான நம் பேரியக்கத் தோழர்களே!_ *வணக்கம்.*

*📲கொரோனா கொடுந்தொற்றால்  தமிழகத்தில் மட்டும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆசிரியப் பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.*

*📲இக்கட்டான இந்தச் சூழலில், நோய்த்தொற்று தொடர்பாக நம் இயக்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி(TNPTF), மதுரை காமராசர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்(MUTA) ஆகியவை இணைந்து 23.05.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30மணிக்கு கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு "இணையவழிக் கருத்தரங்கம்" ஒன்றை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் மும்பையில் பணியாற்றும் தமிழக மருத்துவர் S.பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இன்றைய சூழலில் மிகவும் அவசியமான, தேவையான நிகழ்ச்சி இது.எனவே,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் தவறாது இணைந்து பயன் பெறுமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*_இந்நிகழ்வில் கீழ்க்கண்ட Zoom App Link மூலமாக இணையலாம்._*

https://us02web.zoom.us/j/9313533344?pwd=WmZQS1JrUFJodmFKcFR1ZE9KR3ZOZz09

Meeting ID:931 353 3344
Passcode:938566

*📲மேலும்,Voice of MUTA என்ற முகநூல் வழியிலும் இணையலாம்.*

*📲இந்நிகழ்வில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணையலாம். நிகழ்ச்சியில் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். இச்செய்தியை நம் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்திட அன்புடன் வேண்டுகிறேன்.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Wednesday 19 May 2021

*🛡️ஈடு செய்ய முடியாத இழப்பும், NHIS திட்டத்தில் TNPTF தலையீடும்*

*🛡️ஈடு செய்ய முடியாத இழப்பும், NHIS திட்டத்தில் TNPTF தலையீடும்*

😢தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் *தோழர் ரமேஷ்* அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

🛡️தோழர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் *NHIS* திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் தொகை பெற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் *தோழர் மயில்* மற்றும் ஜாக்டோ ஜியோ நிநிக்காப்பாளர் *தோழர் மோசஸ்* ஆகியோரின் பரிந்துரைப்படி மாநில ஒருங்கிணைப்பாளர் *தோழர் செல்வகணேஷ்* அவர்கள் கடுமையாக முயற்சி செய்து வந்தார்.

🛡️இந்நிலையில் இன்று தோழர் ரமேஷ் அவர்கள் மரணமடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் *ரூபாய் 6 லட்சம்* சிகிச்சை செலவாக கோரியது. இன்சூரன்ஸ் நிறுவனம் சிகிச்சை செலவை அனுமதிக்க மறுத்த நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு தலையிட்டு *ரூபாய் 4 லட்சத்தை* பெற்றுக் கொடுத்துள்ளது.
தோழரின் மறைவால் அவதியுறும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் *தோழர் தியாகராஜன்* அவர்களுக்கும்,  இயக்க தோழர்களுக்கும் ஆறுதலையும் மறைவிற்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*😢துக்கத்துடன்*

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்

*🏠கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருகிறது எனவே விழிப்போடு இருப்போம் வீட்டிலேயே இருப்போம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் விழிப்புணர்வு கடிதம்*

*🏠கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருகிறது எனவே விழிப்போடு இருப்போம் வீட்டிலேயே இருப்போம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் விழிப்புணர்வு கடிதம்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*

*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:19.05.2021*

*காட்டுத்தீ போல்
----------------------------
 பரவும் கொரோனா!*
---------------------------------
 உயிரிழப்புகளைத்
---------------------------------
 தடுக்க விழிப்புடன்
---------------------------------
 செயல்படுவோம்!*
----------------------------------
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்._*

*🏠கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை சுனாமியைப் போல் இந்தியாவைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அது காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. மருத்துவ அவசர நிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது.*

*🏠நம்முடைய வாழ்நாளில் நாம் சந்தித்திராத ஒரு 
சூழலைத் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா, இங்கிலாந்து,இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், பாதிப்புக்களைத் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து நாம் பரிதாபப்பட்டோம். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் நம் இந்திய தேசத்தைப் பார்த்து உலக நாடுகளெல்லாம் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது உலகிலேயே கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ள நாடாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது.*

*🏠உலக நாடுகள் இதில் இருந்து மீண்டதற்கு மிக முக்கியக் காரணம், அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தான். அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள் தனது மக்கள் தொகையில் 90%  பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி விட்டன.நம் நாட்டில் 20% பேர் கூட இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை.எனவே,கொரோனாவை விரட்டும் பேராயுதமாக தடுப்பூசியே விளங்குகிறது.எனவே, நம் இயக்கத் தோழர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தவறாது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமானதாகும்.இதில் இனியும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.*

*🏠தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கும் தொடர் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நம் இயக்கத் தோழர்கள், நம்மோடு இயக்கப் பணியாற்றியவர்கள், நம்மோடு பணியாற்றியவர்கள், உறவினர்கள் நண்பர்கள்,நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் எனப் பலரது இழப்பு என்பது நம்மால் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது.நாள்தோறும் Whatsap,face book  போன்ற சமூக வலைதளங்களைத் திறந்தால் கண்ணீர் அஞ்சலி செய்திகள் அணிவகுத்து வருவது நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போடுவதாக உள்ளது.சமூக வலைதளங்களைத் திறப்பதற்கே அச்சமாக உள்ளது.*

*🏠எனவே,நம் இயக்கத் தோழர்கள் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.வெளி இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது, எப்போதும் முகக் கவசம் அணிவது,சானிடைசர் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவது,சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளைத் தவறாது கடைப் பிடிக்க வேண்டும். நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்கள் உரிய மருந்துகளைத் தவறாமல் எடுத்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.*

*🏠அதையும் மீறி கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதைத்தான் மருத்துவர்கள் மிக அழுத்தமாக வலியுறுத்துகின்றனர். நாளாக நாளாக உடலில் நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்தே உயிரிழப்புகள் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.*

*🏠ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பட்டவர்கள் கோவிட் பாதுகாப்பு மையங்களிலேயே சிகிச்சை பெற்று எவ்வித பாதிப்புமின்றி சாதாரணமாக நலமடைந்து வருவதைப் பார்க்கிறோம்.எனவே, நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் செய்யும் தாமதமும், தயக்கமுமே விபரீத நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் உணர வேண்டும். மேலும்,நோய்த்தொற்று உறுதியானால் அச்சப்படத் தேவையில்லை.சிலர் மனதளவில் மிகவும் பயம் கொள்கின்றனர். "பயமே பாதி நோயைக் கொண்டு வந்துவிடும்; தைரியம் பாதி நோயைக் குணப்படுத்தி விடும்"என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா நோய்த்தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.இதில் கூச்சப்படவோ அல்லது அச்சப்படவோ தேவையில்லை.எனவே துணிச்சலுடன் நோயை எதிர்கொள்வதும்,நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே பரிசோதனை செய்வதும் மிக மிக முக்கியமானது என்பதை நம் இயக்கத் தோழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினர்களுக்கும், இயக்க உறுப்பினர்களுக்கும், நம் அருகில் வசிப்பவர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை நாம் ஊட்ட வேண்டும்.*

*🏠இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில்,அபாய கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது என்பது படித்த வர்க்கமாகிய ஆசிரியப் பெருமக்களின் தலையாய கடமையாகும்.இந்தக் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து மருத்துவர்களும், செவிலியர்களும்,முன் களப்பணியாளர்களும், காவல்துறையினரும், சுகாதாரத் துறை யினரும் உயிரைக் கொடுத்து 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பணியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.இருக்கின்ற வசதிகளைக் கொண்டு அவர்கள் ஆற்றும் சேவை என்பது மகத்தானது.*

 *🏠நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசும் மிகச்சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. உயிர்காக்கும் ஆக்சிஜன்,ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகளைப் பெறுவதில் தமிழக அரசு துரிதமாகச் செயலாற்றி வருகிறது. நோயைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,உயர் அலுவலர்கள் இரவு பகலாகக் கண் துஞ்சாது பணியாற்றி வருகின்றனர்.ஆனால், மத்திய அரசு நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்க எதிர்பார்த்த உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதாக தெரியவில்லை. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு எப்பாடுபட்டேனும் ஆக்சிஜன் அளிப்பது மத்திய அரசின் கடமை. அதை எந்த நாட்டிலிருந்தேனும் இறக்குமதி செய்து அளிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்குரியது. ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நோயாளி இறப்பது என்பது இந்த தேசத்தின் மிகப் பெரிய அவமானம்.*

*🏠கடந்தாண்டு கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு நம் இயக்கத் தோழர்கள் செய்த உதவி மகத்தானது.அப்போது தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்களை நம் இயக்கத் தோழர்கள் வழங்கினார்கள். இவ்வாண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அதற்குரிய அரசாணை  வெளியிடப்பட்டவுடன் நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் ஒருநாள் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.*

*🏠இவ்வாண்டு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு கடந்த ஆண்டை விட பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நோய்த் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.பொது மக்களில் பெரும்பாலோர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.நம் இயக்கத் தோழர்கள் துன்பத்தில் உழலும் மக்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கலாம்.நம் அருகில்  வசிப்பவர்களில் மிகவும் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து உதவலாம். நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வகையில் உதவிப் பணிகளை ஆற்றுவது மிகவும் முக்கியமானது.*

 *🏠எனவே,கண்ணுக்குத் தெரியாத,உலகம் இதுவரை சந்தித்திராத கொடுந்தொற்றான கொரோனாவின்  பாதிப்பிலிருந்து நம்மையும்,நம் குடும்பத்தாரையும், உறவினர்களையும், நண்பர்களையும், அருகில் வசிப்பவர்களையும்,நம்மிடம் பயிலும் மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் நம் இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.தொற்றால் பாதிக்கப்படும் நம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு நம்மால் இயன்ற  உதவிகளை இயன்ற வழிகளில் ஆற்றவேண்டும்.*

 *_காலமறிந்து கடமை ஆற்றுவோம்!_*

*_சூழல் அறிந்து விழிப்போடு செயல்படுவோம்!_*

*_கொரோனா கொடுந்தொற்றிலிருந்து அனைவரையும் காப்போம்!_*

*🤝தோழமையுடன்;
 *ச.மயில்*
 *பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Tuesday 18 May 2021

*🛡️பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் / உடனடியாக திரும்பப் பெற வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*🛡️பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் / உடனடியாக திரும்பப் பெற வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 06/2021 நாள்: 18.05.2021_*

*⚔️*
*🛡️பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை ஒழித்து, அதை ஆணையர் பணியிடமாக்கி, அதில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நியமனம் செய்துள்ளதை தமிழ்நாட்டின் கல்வி  வளர்ச்சி கருதி தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் முறையான பொதுக்கல்வியை மக்களுக்கு வழங்குவதற்காக சென்னையில் பொதுக்கல்வி இயக்ககம் (Directorate of Public Instruction) உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட பொதுக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று பெயர் பெற்றது. அது இன்றளவும் அப்பெயராலேயே வழங்கப்படுகிறது. பொதுக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர்களாக ஆங்கிலேயர்கள் உட்பட பலர் பொறுப்பு வகித்துள்ளார்கள். 1954 இல் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தான் பொதுக்கல்வி  இயக்ககம் என்பது பள்ளிக்கல்வி இயக்ககம் (Directorate of School Education) எனப் பெயர் மாற்றம் பெற்றது. முதல் பள்ளிக்கல்வி இயக்குநராகப் புகழ்பெற்ற கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பொறுப்பேற்றார்.*

*⚔️*
*🛡️அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு இயக்குநர்கள் பதவி வகித்துள்ளனர். மேற்கண்டவாறு இயக்குநர்களாகப் பதவி வகித்தவர்களில் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று உச்சபட்சமாக இயக்குநர் பதவியைப் பெற்றுள்ளார்கள். சமீபகாலமாக இயக்குநர் பதவிக்கு வருபவர்கள் நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி இயக்குநர் பதவிக்கு வந்தவர்கள். இவ்வாறு பதவி உயர்வின் மூலம் இயக்குநர்களாக வருபவர்கள் பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களையும் அனுபவப்பூர்வமாக அறிந்தவர்களாகவும், நீண்ட கள அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளனர். அதுவே மாநிலத்தின் மிகப்பெரிய துறையான பள்ளிக்கல்வித்துறைக்கு பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு, பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தேசிய கல்விக் கொள்கையைப் புறக்கணிப்போம் என்பன உள்ளிட்ட தமிழ்நாட்டின் கல்வி நலன் சார்ந்த செயல்பாடுகளை துணிச்சலுடன் மேற்கொண்டு பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இச்சூழலில் தமிழக அரசு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஆணையர் பணியிடமாக மாற்றி இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை திடீரென நியமித்திருப்பது என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் நலன் கருதி பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் மீண்டும் பழைய நிலையில் அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் தேவையின்றி உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்திட வேண்டும். அதேபோன்று கடந்த ஆட்சியில் தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர் இயக்கங்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில் 1994 முதல் தொடக்கக்கல்வி துறையை நிர்வகிக்க தனியாக தொடக்கக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த ஆட்சியில் அப்பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. அப்பணியிடங்களை மீண்டும் உருவாக்கி தொடக்கக்கல்வி இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கக் கல்வியைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் முன்புபோல் தொடக்கக்கல்வித்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் தனித்தனி நிர்வாக அமைப்புகளாகச் செயல்பட தமிழக அரசு ஆவண செய்திட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி ஆகிய இரண்டும் சிறப்பானதொரு வளர்ச்சியைப்பெறும். அந்த நிலையை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

Monday 17 May 2021

*🗣️புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை புறக்கணித்தது தமிழக அரசு*

*🗣️புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை புறக்கணித்தது தமிழக அரசு*

*🗣️கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை*

*🗣️மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்   கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு  புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணித்தது*

*🗣️புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம்*

*_-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி_*

_புகைப்படம் வெளியீடு:_ 

*_நன்றி தீக்கதிர்_*


Friday 7 May 2021

*💐தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா - வாழ்த்து செய்தி*

*💐தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா - வாழ்த்து செய்தி*

_✍️அயன் சரவணன்_


*🌟மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை (07.05.2021) இன்று காலை 9.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.*

💐✨💐✨💐✨💐✨💐✨
*_⚡முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,_*

*_⚡துறை ரீதியாக பொறுப்பேற்க உள்ள 33 அமைச்சர் பெருமக்களுக்கும்,_*

*_⚡ சட்டமன்ற உறுப்பினராக (MLA) பொறுப்பேற்க உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்._*
💐✨💐✨💐✨💐✨💐✨
*இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*
💐✨💐✨💐✨💐✨💐✨

_✍️அனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலைமையினை மீண்டும் கொண்டுவர வேண்டும்._

_✍️ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்._

_✍️ மக்கள் நலன், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் காத்திடவும் நல்லாட்சி அமைந்திடவும் இறைவனை வேண்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்._

✨💐⚡✍️✨💐⚡✍️✨💐


*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஓர் சிறப்பு பார்வை*

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஓர் சிறப்பு பார்வை*

*_✍️அயன் சரவணன்_*

*⚡திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2.5.1977-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் நல்லமுத்து பொய்யாமொழி.*

*⚡மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மறைந்த முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் தர்மலிங்கம். திரு.அன்பில் தர்மலிங்கத்தின் மகன் திரு.அன்பில் பொய்யாமொழி. இவர் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். திரு.அன்பில் பொய்யாமொழியின் மகனே திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி.*

*⚡அன்பில் பொய்யாமொழி இளம்வயதிலேயே இறந்துவிட அவரது மகன் மகேஷ் ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார். ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கமான நண்பரானார். இவர்களின் நட்பு மூன்று தலைமுறைகளாகத் தொடர்கிறது.*

*⚡2001-ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.C.A., முடித்த மகேஷ் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்தார்.*

*⚡கட்சிப் பொறுப்பைப் பொறுத்தவரை, திமுக-வின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராகவும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உயர்த்தப்பட்டார்.*

*⚡கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாகத் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினரனார்.*

*⚡மீண்டும் இரண்டாம் முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போதைய திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.*

*⚡சமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் மிகச்சில அமைச்சர்களில் 44 வயதான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஒருவர்.*

*⚡பா.ச்ச.க-வின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப அது சட்டமாகும் முன்பே அதற்கான கட்டமைப்புகளை கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் செய்து கொடுத்துள்ளனர்.*

*⚡சமூகச் செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப சீரழிக்கப்பட்டுள்ள பள்ளிக்  கல்வித்துறையை மீட்டு, தமிழ்நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பிற்கு ஏற்ப அடுத்த கட்டத்திற்கு நேராக பள்ளிக்கல்வியை எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அளிக்கப்பட்டுள்ளது.*

*⚡சுருங்கக்கூறின் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.*

Monday 3 May 2021

*🚩திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி*

*🚩திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி*

*[T] [N] [P] [T] [F]*
*_[அ][ய][ன்]_*

*//வாழ்த்துச்செய்தி//*

*🚩நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளுகின்ற பெரும் பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.*

*🚩தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*