Thursday 22 August 2019

*12.08.2019 குற்றாலம் மாநிலச்செயற்குழு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/12082019.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 22  நாள்  : 22.08.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*



**

*🛡12.08.2019 குற்றாலம் மாநிலச்செயற்குழு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும்  உள்ளது. மிக நெருக்கடியான காலகட்டத்தில் இயக்கச் செயல்பாடுகளை முன்னெப்போதையும் விட வேகத்தோடும், விவேகத்தோடும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக மாவட்டக்கிளைகள் மாநில அமைப்பிற்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை எவ்விதத் தவிர்ப்புமின்றி மாநிலச் செயற்குழு முடிவின்படி இன்றைக்குள்(22.08.2019) செலுத்தவேண்டியது மாவட்டக்கிளைகளின் தலையாய கடமையாகும். இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சனைகளுக்காக நீதிமன்றங்களின் வழியே சட்டப்போராட்டங்களையும்  நாம் நடத்தவேண்டியுள்ளது. எனவே, நிதி நிலுவைகளை மாவட்ட அமைப்புகள் மாநில அமைப்பிற்குச் செலுத்துவதற்கு ஏதுவாக வட்டார, நகரக்கிளைகள் மிகுந்த சிரத்தையுடன் மாவட்டக்கிளைகளுக்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை உடன் செலுத்தி உதவிட மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*



**

*🛡மாணவர்கள் வருகை இல்லை என்பதைக் காரணம் காட்டி கடந்த சில நாட்களில்  தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள 46  அரசுப்பள்ளிகள் தொடர்பான விவரங்களை மாவட்டக்கிளைகள் அறிக்கையாக மாநில மையத்திற்கு அளித்திட மாநிலச் செயற்குழு கேட்டுக்கொண்டதற்கேற்ப மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் செயல்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. மூடப்பட்டுள்ள பள்ளிகள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் திரட்டுவதற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் நேரடியாக மூடப்பட்ட பள்ளி அமைந்துள்ள கிராமத்திற்குச் சென்று கள ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் விரிவான அறிக்கையை அளித்திட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது. மேலும், 46 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டது என்பது தமிழகம் முழுவதும் 10 க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூடுவதற்கான முன்னோட்டம் என்பதால் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையையும் துல்லியமாகக் கணக்கிட்டு மாநில மையத்திற்குத் தெரிவித்திட வேண்டும். மேற்கண்ட பணியை இதுவரை நிறைவு செய்யாத மாவட்டக்கிளைகள் உடன் செயலாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*


**

*🛡“தேசியக்கல்விக்கொள்கை – 2019 ஜ   திரும்பப்பெறு” “மூடிய பள்ளிகளைத் திற”       “அரசுப்பள்ளிகளை  மூடாதே” “தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்காதே” ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் ஆறு முனைகளிலிருந்து  23.09.2019 முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள மாநிலச் செயற்குழு எடுத்த முடிவை வெற்றிகரமாக்க பல்வேறு களப்பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விரைவில் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான  கூட்டங்களை  நடத்தி அந்தந்த  மண்டலத்தில் பிரச்சாரப் பயணத்தை திட்டமிடும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் செல்லும் வழி, பயணத்திட்டம் ஆகியவற்றை மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்கூட்டியே ஆலோசித்து, திட்டமிட்டு மண்டல அளவிலான கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அந்தந்த மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கருத்துக்களை அறிந்து மண்டல அளவிலான பிரச்சாரப் பயணத்தை இறுதிப்படுத்திட அது ஏதுவாக அமையும்.*



**

*🛡அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறாத நம் இயக்கத் தோழர்களின் 17(ஆ) நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குத் தொடுத்திட ஏதுவாக வக்காலத்துப் படிவத்தில் அவர்களின் கையொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் மதுரை மாவட்டச் செயலாளர் முகவரிக்கு உடன் அனுப்பி வைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.* 

                                                                                                                           


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: