Thursday 22 August 2019

*தமிழக அரசு தொடக்கக்கல்வித் துறையை அழிக்கும் அரசாணை 145 மற்றும் ந.க.எண்.2448B7/ SS/BRC/2019 நாள் : 07.08.2019 (வளாகக்கல்வி, பள்ளிகள் இணைப்பு) - ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் - TNPTF எச்சரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/145-2448b7-ssbrc2019-07082019-tnptf.html



*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 12_*

*_நாள் : 22.08.2019_*



**

*🛡தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் தனித்தன்மையையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு சமீபத்தில் வெளிட்டுள்ள அரசாணையையும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாநில இயக்ககம் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 35 ஆயிரத்து 414 ஆரம்பப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 208 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.*



**

*🛡பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வந்த இப்பள்ளிகளை பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், நிர்வாக வசதிக்காகவும், தொடக்கக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காகவும் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வித்துறையைத் தனியே பிரித்து  தனி இயக்குநரகம் உருவாக்கினார்.*



**

*🛡அதன்படி கடந்த 25 ஆண்டுகாலமாகத் தனி நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித்துறையை மீண்டும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சிகளை தமிழக அரசு படிப்படியாகச் செய்து வருகிறது.*



**

*🛡அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளையும் , செயல்முறை ஆணைகளையும்,  அரசாணைகளையும், வாய்மொழி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. இன்று என்ன உத்தரவு வருமோ என்ற அச்ச உணர்வோடு தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் பணியாற்றி வருகிறார்கள்.*



**

*🛡சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண் : 145 பள்ளிக்கல்வித் (தொ.க3(2)துறை நாள்.20.08.2019-ன் படி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அதே வளாகத்தில்  உள்ள உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது.*



**

*🛡அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின்  மாநில இயக்ககம் வெளியிட்டுள்ள ந.க.எண்.2448B7/ SS/BRC/2019 நாள் : 07.08.2019 -ன் படி குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப்பள்ளிகள் இருக்கும் என்றும் அக்குறுவள மையங்களில் இடம்பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.*



**

*🛡ஒரே வளாகத்தில் செயல்படும் வெவ்வேறு பள்ளிகளுக்கு வேறுவேறு தலைமை ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், குறுவள மையங்களில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் உள்ள நிலையிலும் இவ்வாறான உத்தரவு என்பது தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் செயலாகவே கருதப்படும்.*



**

*🛡மேலும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்க வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்னொரு பள்ளியை கண்காணிப்பார் என்பதும் , ஆய்வு செய்வார் என்பதும் பொருத்தமானதல்ல.*



**

*🛡மேலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டிய நிலையிலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலையிலும் கடுமையான பணிப்பளுவைக் கொண்டுள்ள நிலையில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளையும் நிர்வகிக்க வேண்டும் என்பது எவ்விதத்திலும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவாது.*



**

*🛡இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கை – 2019- ன் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வளாகக்கல்வி, பள்ளிகள் இணைப்பு போன்ற ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை தமிழக அரசு இப்போதே நடைமுறைப்படுத்துவதுபோல் தெரிகிறது.*



**

*🛡ஏற்கனவே, மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 46 அரசு ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கக்கல்வித்துறை தொடர்பாக வெளியிடப்படும் இதுபோன்ற அரசாணைகள் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாது என்பதால் மேற்படி அரசாணைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற்று தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித்துறையை பாதுகாக்க  வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡அவ்வாறு திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்.*



*_சென்னை._*

*_22.08.2019_*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: