Friday 28 August 2020

*நாடாளுமன்ற விவாதமற்ற NEP-2020-ன் பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்ற செயல் - TNPTF*

*நாடாளுமன்ற விவாதமற்ற NEP-2020-ன் பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்ற செயல் - TNPTF*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 14/2020_
_நாள்: 28.08.2020_

*⚔️*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் 27.08.2020 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசியக்கல்விக் கொள்கை 2020 தொடர்பான விவாதத்தை மாநில பொதுச்செயலாளர் ச.மயில் துவக்கி வைத்தார். இவ்விவாதத்தில் மாநிலப் பொருளாளர் க.ஜோதி பாபு, துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் 31.08.2020-க்குள் இணையதளம் வாயிலாகக் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020 என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசியப் பிரச்சினை ஆகும். அத்தகு கல்விக் கொள்கையை பாராளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.*

*⚔️*
*🛡அது மட்டுமல்ல, இந்தியா என்பது பல்வேறு மொழிவாரி மாநிலங்களின் கூட்டமைப்பாகும். தேசியக்கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.*

*⚔️*
*🛡கல்வி மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகளின் கருத்துக்களைக் கூட எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்துக் கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக தமிழக அரசும் தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும்.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்துக் கோரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 11 கருப்பொருள்கள் (Themes) கொண்டதாகவும், அதன் கீழ் 102 வினாக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது.*

*⚔️*
*🛡இந்தியா பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய, படிக்கக்கூடிய 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு வாழும் மக்களில் 50% பேருக்கு மட்டுமே இந்தி தெரியும். 15% பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும்.*

*⚔️*
*🛡 ஆசிரியர்களாக இருப்பினும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொண்டு, தாய்மொழியில் கருத்துக்களைத் தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் கருத்துக்களைத் தெரிவிக்க இயலாது என்பதுதான் நடைமுறை உண்மை. இவ்வாறிருக்க இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்துக் கேட்பது என்பது எவ்விதப் பயனையும் தராது.*

*⚔️*
*🛡கடந்த ஆண்டு தேசியக்கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள பாதகமான அம்சங்கள், திருத்தப்பட வேண்டிய விவரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் கல்வியாளர்கள் ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த அத்தனை கருத்துக்களையும் புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்து, அதன் அடிப்படையில் தேசியக்கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*

*⚔️*
*🛡பல்வேறு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ள தேசியக்கல்விக் கொள்கை தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது தான் வேடிக்கையாக உள்ளது.*

*⚔️*
*🛡அதிலும் கருத்துக் கேட்புப் படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி, பணியாற்றும் பள்ளி, பள்ளியின் U-DISE எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தையும் கேட்பது என்பது ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கும் செயலாகவும் உள்ளது. எனவே, இக்கருத்துக் கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மையாகும்.*

*⚔️*
*🛡எனவே, தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கும் எதிரான பல்வேறு கூறுகளைக் கொண்ட தேசியக்கல்விக் கொள்கை – 2020 ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.*

*⚔️*
*🛡அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கபூர்வமான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தேசியக்கல்விக் கொள்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_தோழமையுடன்_

*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments: