Friday, 6 November 2020

*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! - இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! - இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 18/2020  நாள்: 06.11.2020_*

*⚔️*
*🛡️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்! இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்திட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._

*⚔️*
*🛡️தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கித் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை மிகவும் வரவேற்கத்தக்கது. அரசின் இம்முடிவு ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியது. ஆனால், அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இந்த இட ஒதுக்கீட்டில் கொண்டு வராதது இட ஒதுக்கீட்டின் பயன் ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைக் கணக்கில் கொண்டு இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது என்பது அவசியமானது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 438, நாள்:  29.10.2020 ல் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாநில இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதில் அரசு உதவிபெறும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாதது கடந்தகால நடைமுறைகளுக்கு முரணாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது.*

*⚔️*
*🛡️அரசு உதவி பெறும் பள்ளிகள் என்பவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் நோக்கில் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாடு விடுதலை அடைந்த பின்பும் நாடு முழுவதும் அரசே பள்ளிகளைத் தொடங்குவதற்கு இயலாத நிலையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக அரசுப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களால் அரசு உதவியுடன் தொடங்கப்பட்டவைதான் அரசு உதவி பெறும் பள்ளிகள். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கி வருகிறது. இங்கு முழுக்க முழுக்க அரசின் இலவசக் கல்வியே வழங்கப்பட்டுவருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளில் மிகப் பெரும்பாலோர் ஏழைக் குழந்தைகள். அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.*

*⚔️*
*🛡️தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 விலையில்லாப் பொருட்கள், அனைத்து கல்வி உதவித் தொகைகள் உட்பட அரசின் அனைத்துச் சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றன.*

*⚔️*
*🛡️இதுவரை தமிழக அரசு வெளியிட்டுள்ள மாணவர்களுக்கு பயனளிக்கும் எந்தவொரு திட்டம் தொடர்பான அரசாணையாக இருந்தாலும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றே குறிப்பிட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படாதது என்பது ஒரு பகுதி  ஏழைக் குழந்தைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு கடந்தகால நடைமுறைகளைப் பின்பற்றி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்த்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும். இது நலிவடைந்து வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கும் உதவும். அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும்.*

*⚔️*
*🛡️மேலும், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மாணவர் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதமாக உள்ளது. எனவே, தமிழக அரசு வழங்கியுள்ள 7.5 சதவீத மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானதாகும். எனவே, இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி பொன்.கலையரசன் குழு பரிந்துரைத்தவாறு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*                                        
                                        
சென்னை
06.11.2020

_🤝தோழமையுடன்;_
   
*_ச. மயில்,_*   _பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: