Saturday 27 July 2019

*தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேசியக் கல்விக்கொள்கையின்மீது தேசநலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கூடுதல் அக்கறையும், பொறுப்புணர்வும் உண்டு - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_27.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 20  நாள்  : 27.07.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*



*🌟இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பானதுதான். டாக்டர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான குழுவின் 484 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையின் மீது கருத்துக்களைத் தெரிவிக்க 6 மாதகால அவகாசம் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், நம்மைப் போன்ற கல்வி நலனில் அக்கறை கொண்ட சமூக நல அமைப்புகளும் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து கூடுதலாக ஒரு மாதகால அவகாசத்தை மட்டுமே நீட்டித்துள்ளது.*


*🌟30 கோடி மாணவர்களின் கல்வி தொடர்பான பிரச்சனையில் அவசர கோலத்தில் முடிவுகள் எடுப்பது என்பதும், தேசத்தின் மிக மிக முக்கியமான கொள்கையின்மீது குறுகிய கால அவகாசத்தில் முடிவுகள் எடுப்பது என்பதும் ஏற்புடையதல்ல.  1985க்குப் பின்பு 34 ஆண்டுகள் கழித்து தேசத்தின் கல்விக்கொள்கை தொடர்பான இந்நிகழ்வில் மத்திய அரசு அவசரம் காட்டுவதை விடுத்து இன்னும் கூடுதலாக 6 மாதகாலம் அவகாசம் கொடுப்பதே சரியானது என்பதே நமது  அமைப்பின் கருத்தாகும். தேசியக் கல்விக்கொள்கை – 2019 ன் வரைவு அறிக்கை தேசத்தின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, கல்வியை வணிகமயமாக்கக்கூடிய, ஏழை எளிய  குழந்தைகளின் கல்வி நலனுக்கு உதவாத, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி நலனைப் பாதிக்கக்கூடிய, இலவசக்கல்வி என்பது எதிர்காலத்தில் எட்டாக்கனியாக மாறக்கூடிய, ஒரு சார்புத் தன்மை கொண்டதாக, இடைவிடாத தேர்வுகளின் மூலம் மாணவர்களின் தொடர்க்கல்விக்கும், உயர்கல்விக்கும் தடை ஏற்படுத்தக்கூடியதாக, இந்தியா என்ற பரந்துவிரிந்த தேசத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடியதாக, இது போன்ற இன்னும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய  பல்வேறு கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.*


*🌟தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேசியக் கல்விக்கொள்கையின்மீது தேசநலனில் அக்கறை கொண்ட நம்மைப்போன்ற  ஆசிரியர் இயக்கங்களுக்கு கூடுதல் அக்கறையும், பொறுப்புணர்வும் உண்டு.  1985-ல் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  அமைக்கப்பட்ட குழு அதை ஆய்வு செய்து சமூக அக்கறையோடு வெளியிட்ட கருத்துக்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் “விடுதலை” பத்திரிகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  பார்வையில் புதிய கல்வி என்ற தலைப்பில்*


*⚡1. புதிய கல்விக் கொள்கை சித்தரிக்கும் அவலம்*

*⚡2. கட்டாய இலவசக்கல்விக்கு மூடுவிழா*

*⚡3. தொழிலாளர்களைச் சுரண்டவிடும் அநியாயம்*

*⚡4. பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் - பின்னோக்கிய உப  தலைப்புகளில் 4 வாரங்கள் வெளிவந்த நிகழ்வு என்பதும், அதைத் தொடர்ந்து திருச்சியில் “ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பார்வையில் புதிய கல்விக்கொள்கை” என்ற பெயரில் மாநில அளவில் மாபெரும் கருத்தரங்கம் நடத்திய நிகழ்வு என்பதும் வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.  தேச முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பிரச்சனைகளில் தனது நுணுக்கமான சமூக அக்கறையை வெளிப்படுத்துவதில் இணையற்ற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


*🌟இன்றைய தேசியக்கல்விக்கொள்கை-2019 வரைவு அறிக்கை தொடர்பாகவும் நமது பேரியக்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, அதன் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு உரிய கால அவகாசத்திற்குள் மத்திய, மாநில அரசுகளுக்கு நமது இயக்கக் கருத்துக்கள் உரிய  முறையில் அனுப்பப்படும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.*


*🌟21.07.2019 அன்று மதுரையில் நடைபெற்ற இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  (STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் தேசியக்கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை  தொடர்பாக மாவட்டங்களில் கருத்தரங்குகளை நடத்தக் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நம் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள்  STFI-ன் இணைப்புச் சங்கங்களான நம் தோழமைச்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகளை அணுகி, உரியமுறையில் மாவட்ட அளவிலான இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) கூட்டங்களைக் கூட்டி, தோழமைச்சங்க நிர்வாகிகளுடன்  தோளோடு தோள் நின்று STFI சார்பில்  மாவட்ட அளவிலான கருத்தரங்குகளை நடத்திட முனைப்புடன் களப்பணியாற்றிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*🌟மேலும், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவான ஆகஸ்டு-2ஆம் நாளை தமிழகம் முழுவதும் 02.08.2019 அன்று எழுச்சியுடன் கொண்டாட அனைத்து மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.* 


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: